அனலைதீவு இறங்குதுறை பகுதியில் அனலைதீவு ஐயனார் ஆலயத்திலிருந்து இடிக்கப்பட்ட கற்கள் மண்களை மக்களின் வேண்டுகோளிற்கிணங்க, இறங்குதுறை பகுதியில் கொட்டப்பட்ட மண்ணை, கரையோர மூலவள முகாமை திணைக்கள அனுமதியின்றி கொட்டியதற்காக கூறி அந்த மண்ணை அகற்றக்கோரி ஆலய நிர்வாகத்திற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை ஆலய நிர்வாகத்தினர் வாகனங்கள் மூலம் கொட்டிய மண்ணை மீள எடுக்க முனைந்த போது மக்கள், பொது அமைப்புக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, படகு போக்குவரத்து சேவையை முற்றாக நிறுத்தி தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
எக்காரணம் கொண்டும் கொட்டப்பட்ட மண் அகற்றப்படக்கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்து தங்களுக்கு கிடைத்த பயனை விசமிகளின் செயலால் குழப்ப முனைகின்றனர் என தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஈபிடிபி உறுப்பினர் கமல் அவர்கள் முன்வந்து கொட்டிய மண்ணை மீள் எடுக்க வேண்டாம் என்றும் தொடர்ந்து படகுசேவை வழங்குமாறும் இதற்கான தீர்வு நாளை தெரிவிப்பதாகவும் கூறியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர் எனவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.