January 23, 2026
அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத வெள்ளம்: – 78 பேர் உயிரிழப்பு – மீட்புப்பணிகள் தீவிரம்!
Top World News புதிய செய்திகள்

அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத வெள்ளம்: – 78 பேர் உயிரிழப்பு – மீட்புப்பணிகள் தீவிரம்!

Jul 7, 2025

அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளி கிழமையன்று ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தால் குறைந்தது 78 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், மேலும் 41 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர் எனவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கெர் கவுண்டியின் (Kerr County) கிராமப்புறப் பகுதியில் அமைந்துள்ள குவாடலூப் ஆற்றின் அருகே நடத்தப்பட்ட “கேம்ப் மிஸ்டிக்” (Camp Mystic) எனப்படும் ஒரு பிரபலமான முகாமில் வசித்து வந்த கிறிஸ்தவ சிறுமிகள் முகாமில் ஏற்பட்ட பெருமழையின் காரணமாக உயிரிழந்துள்ள தகவல் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை மரணமடைந்தவர்களில் 28 குழந்தைகள் அடங்குவதாகவும், தற்போது 10 சிறுமிகளும், முகாமின் ஒரு பெண் பயிற்றுநரும் காணாமல் போய் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், மீட்புப் பணிகள் தொடர்கின்றன எனவும், உயிரிழப்புக்களின் புள்ளிவிவரங்கள் மேலும் உயரும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வெள்ளம் ஏற்பட்ட தருணத்தில், குவாடலூப் ஆறு வெறும் 45 நிமிடங்களில் 26 அடியளவுக்கு (8 மீட்டர்) உயர்ந்ததாகவும், இந்த நேரத்தில் பெரும்பாலான  சிறுமிகள் முகாமில் உறங்கிக் கொண்டிருந்த காரணத்தினால் தப்பிக்க முடியவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இந்த பேரழிவில் முகாமின் நீண்டகால இயக்குநரான ரிச்சர்ட் “டிக்” ஈஸ்ட்லாண்ட்டும் உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, முகாமிலிருந்து 8 மைல்கள் தொலைவில் சில உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், முகாமைச் சுற்றியுள்ள ஆற்றுப் பகுதியில் பசை, துணிகள், புனிதப் பொருட்கள் என பலவும் சிதறியுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்தில் வீட்டை இழந்தோருக்கும், மீட்புப் பணியாளர்களுக்குமான உணவு, உடைகள், தங்குமிடங்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய பொதுமக்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். மக்களின் இந்த செயலானது மனித நேயத்தின் வெளிப்பாடாக அனைவராலும் பார்க்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் உயிரிழந்தோருக்கு பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், வத்திக்கானின் உரோம் நகரிலிருந்து, போப் லியோ XIV, “தங்கள் மக்களை இழந்த பெற்றோர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் ”குவாடலூப் ஆற்றின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் முகாம் பங்கேற்பாளர்களுக்காக சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்கிறேன்” எனவும் உருக்கமான செய்தியை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கெர் கவுண்டிக்கு பேரழிவு நிலை அறிவித்து, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தினை (FEMA) விரைந்து, செயற்படுமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் “அதிர்ச்சிகரமானது” என அவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *