அமெரிக்க இரு கட்சி முறைக்கு சவால்: எலான் மஸ்க் புதிய அரசியல் நகர்வில்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான கடுமையான அரசியல் மோதலுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
“அமெரிக்கா கட்சி” (America Party) என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கட்சி, தற்போது நிலவுகின்ற இரு கட்சி அமைப்பின் மீதான நம்பிக்கையிழப்பு காரணமாக உருவாக்கப்படுவதாக அவர் தனது சமூக ஊடகமான X-ல் (முன்னர் ட்விட்டர்) தெரிவித்துள்ளார்.

“நம் நாட்டை வீண்செலவு மற்றும் ஊழல் மூலம் திவாலாக்கும் விஷயத்தில், நாம் ஒரு கட்சி முறையில் வாழ்கிறோம், ஜனநாயகத்தில் அல்ல.,” என்றும், ”இன்று ‘அமெரிக்கா கட்சி’ உருவாக்கப்படுகிறது – உங்கள் சுதந்திரத்தை மீண்டும் கொடுக்க.” என்றும் மஸ்க் அதில் குறிப்பிட்டிருந்தார்.
மஸ்க், டிரம்ப் தலைமையிலான 2024 தேர்தல் பிரச்சாரத்திற்கு மிகப்பெரிய தனிப்பட்ட நன்கொடையாளராகவும், நெருக்கமான ஆலோசகராகவும் இருந்தவர். ஆனால் சமீபத்தில் ட்ரம்ப் கொண்டு வந்த முக்கியமான உள்நாட்டு கொள்கை மசோதா பற்றி மஸ்க் கடுமையாக விமர்சித்ததிலிருந்து இருவருக்கிடையே மோதல் உருவாகியுள்ளது.
அந்த மசோதா அரசு கடனில் மேலும் டிரில்லியன்கள் செலவாகும் என நிபுணர்கள் கணித்ததை அடிப்படையாக கொண்டு மஸ்க் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆயினும், பின்பு மஸ்க் சில கடுமையான சமூக ஊடக பதிவுகளை நீக்கியதும், வருத்தம் தெரிவித்ததும் முதலில் இந்த மோதல் சமாதானமாக முடிந்தது போல் தோன்றியதற்கு பின்னணியாக இருந்தது. ஆனால், ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை அந்த மசோதாவை சட்டமாக கையெழுத்திட்டதன் பின்னர், மஸ்க் தனது கட்சியின் உருவாக்கத்தைத் தெளிவாக அறிவித்துள்ளார்.

மஸ்கின் இந்த நடவடிக்கையை “முட்டாள்தனமான ஒன்று” என்று கூறிய டிரம்ப், “மூன்றாவது கட்சி ஆரம்பிப்பது குழப்பத்தை ஏற்படுத்தும்,” என்றும், “அமெரிக்காவின் இரு கட்சி அமைப்பே வெற்றி வாய்ப்பு உடையது,” என்றும் விமர்சித்துள்ளார்.
மஸ்க் அரசியலுக்கு நேரடியாக குதிப்பதால், ட்ரம்ப் அரசாங்கம் அதற்கு எதிராகத் திரும்பியுள்ளதுடன், மஸ்க் தலைமையிலிருந்த அரசாங்க துறையான ” அரசு செயல்திறன் துறை” (Government Efficiency Department) குறித்து விமர்சித்து, “இந்த கொடூரமான பிரிவே எலானை விழுங்க வரலாம்,” என ட்ரம்ப் கருத்து தெரிவித்தார். மேலும், மஸ்க் நிறுவனங்களுடன் உள்ள பெரும் அரசு ஒப்பந்தங்களை மீளாய்வு செய்ய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக, 1992ல் பெரும் பணக்காரரான ராஸ் பெரோட்,அமெரிக்காவில் மூன்றாவது வேட்பாளராகத் தன்னை நிறுவ முயன்றார். அவர் மக்கள் வாக்குகளில் 20% பெற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், ஒரு மாநிலத்தையும் வெல்ல முடியவில்லை. அதுபோலவே மஸ்கின் முயற்சியும் வெற்றியடையுமா என்பது இன்னும் சந்தேகம்தான் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
![]()