இந்தியாவில் பெண் வைத்தியருக்கு நேர்ந்த கொடூரம் – நாடு முழுவதும் போராட்டம்..!
இந்தியாவின் கொல்கத்தாவில் இளம் பயிற்சி வைத்தியர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சட்டம் ஒழுங்கு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் இந்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, தபால், தொலைநகல் அல்லது வாட்ஸ்அப் மூலம் அறிக்கைகளை அனுப்ப உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயதான பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் நாடு முழுவதும் உள்ள வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், வைத்தியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு இன்று (18) காலை ஆறு மணியுடன் நிறைவடைந்ததாக மேலும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
![]()