நேற்றைய தினம்(11) இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்றிருந்தது.

பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பாக சரித் அசலங்க 97 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 61 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.

பந்து வீச்சில் அஷ்மதுல்லா ஒமர்ஷை 3 விக்கட்டுக்களை அதிகபட்சமாக ஆப்கானிஸ்தான் சார்பாக வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 33.5 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையு இழந்து 153 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ரஹ்மத் ஷா 63 ஓட்டங்களையும், இப்ராஹிம் ஷந்ரான் 54 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றிருந்தனர்.

இலங்கை அணிக்கு வனிந்து ஹசரங்க 4 விக்கட்டுக்களையும் அசித பெர்னாண்டோ மற்றும் டில்சான் மதுஷங்க ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக சரித் அசலங்க தெரிவாகியிருந்தார்.

இந்த வெற்றியுடன் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

இத்தொடரின் அடுத்த போட்டி எதிர்வரும் புதன்கிழமை பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here