
இளம்பெண்ணின் முகத்தில் சூடுவைத்த இளைஞன்..!
இந்தியா உத்தரப்பிரதேச மாநிலம், கெரி பகுதியில் நபரொருவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணைக் கடத்திச் சென்று சூடான இரும்பு கம்பியால் அவரது கன்னத்தில் பெயரை எழுதி சித்ரவதை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உத்தரப்பிரதேச மாநிலம், கெரி பகுதியைச் சேர்ந்த அமன் ஹூசைன் என்ற நபர் அப்பகுதியில் உள்ள இளம்பெண்ணிடம், திருமணம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த நபரின் நடத்தை பிடிக்காததால், அப்பெண் திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அப்பெண்ணின் மீது குறித்த நபர் கோபமடைந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணை, கடத்தி ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டில் கை, கால்களைக் கயிற்றால் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக அப்பெண் மீதான ஆத்திரம் தீராமல் சூடான இரும்பு ராடால் முகத்தில் சூடு வைத்துள்ளார்.
மேலும், ஹூசைன் என்ற தன் பெயரை, அப்பெண்ணின் முகத்தில் சூடான இரும்பு ராடு மூலம் எழுதி சித்ரவதை செய்துள்ளார். இதையடுத்து, அவரிடம் இருந்து தப்பித்து வந்த இளம்பெண், தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார்.
மேலும் கெரி காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அமன் ஹூசைன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.