காசாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களால் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது.
விடியற்காலையிலிருந்து இன்று காலை வரை நடைபெற்ற தாக்குதல்களில் 73 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் குறைந்தது 33 பேர் மனிதாபிமான உதவி தேடுபவர்கள் எனவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நிர்வாகிக்கும் உதவி விநியோகப் பகுதிகளில் நடத்தப்பட்ட இஸ்ரேலின் “தூண்டப்படாத துப்பாக்கிச் சூடு” காரணமாக பொதுமக்கள் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
தாக்குதல் இடம்பெற்ற இடங்களில் “திகில் மற்றும் கொடூர காட்சிகள்” உருவானதாக சாட்சிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 48 மணி நேரங்களில் மட்டும் 300க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர் என்று காசா அரசாங்க ஊடக அலுவலகம் அறிவித்துள்ளது.
அதில் 26 பிரதேசங்களில் “இரத்தக் களரி போல தாக்குதல்கள்” நடந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 60 நாள் போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டதாக அறிவித்ததையடுத்து, ஹமாஸ் அதைப் பற்றி புதிய ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
காசாவில் கடந்த அக்டோபர் 7ஆம் திகதி தொடங்கிய இஸ்ரேலின் போர்மூலம் இதுவரை 57,012 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 134,592 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேவேளை, அக்டோபர் 7ஆம் தேதியிலேயே இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டதாகவும், 200க்கும் மேற்பட்டோர் ஹமாஸ் ஆயுதக் குழுக்களால் சிறைபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலைமைகள் தொடர்ந்தால், காசா மக்களின் வாழ்க்கை மேலும் அழிவை நோக்கிச் செல்லும் அபாயம் நிலவுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.



