ஈரான் அரசினால் அகதிகள் வெளியேற்றம் – ஐ.நா. உட்பட உலகம் முழுவதும் கண்டனம்!
ஈரான் அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு முடிவடைவதால்,அங்குள்ள மில்லியன் கணக்கான ஆப்கானிய குடியேறிகள் மற்றும் அகதிகள் வெளியேற வேண்டும் என்றும் விதிகளை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுடனான 12 நாட்கள் நீண்ட பதற்றமான மோதலை அடுத்து, தேசிய பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து ஆப்கானிய குடியேறிகள் அவர்கள் தாயகம் திரும்ப வேண்டிய கடைசி தேதியாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டது.
இதே வேளையில், இந்த நடவடிக்கை உலகம் முழுவதும் மனிதாபிமான அமைப்புகள் மற்றும் அகதிகளுக்கான அமைப்புகளின் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வறுமை, போர், தாலிபான் ஆட்சியின் அடக்குமுறை ஆகியவையிலிருந்து தப்பிக்க, பல ஆண்டுகளாக ஈரானில் தங்கியிருக்கும் ஆப்கானியர்கள் தங்களுடைய வாழ்க்கையை இழந்து நாடுகடத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ஈரான் சுமார் 4 மில்லியன் ஆப்கானிய குடியேறிகள் மற்றும் அகதிகளின் தாயகமாகும் , மேலும் பலர் பல தசாப்தங்களாக அங்கு வசித்து வருகின்றனர்.
2023 ஆம் ஆண்டில், தெஹ்ரானில் “சட்டவிரோதமாக” வசிப்பதாகக் கூறும் வெளிநாட்டினரை வெளியேற்றும் பிரச்சாரத்தைத் ஈரான் தொடங்கியது. மார்ச் மாதத்தில், ஈரானிய அரசாங்கம், தங்க உரிமை இல்லாத ஆப்கானியர்கள் ஞாயிற்றுக்கிழமைக்குள் தானாக முன்வந்து வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

அப்போதிருந்து, 700,000 க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் இன்றுவரை வெளியேறியுள்ளதுடன், மேலும் லட்சக்கணக்கானோர் வெளியேற்றத்தை எதிர்கொண்டு வருகின்றனர். ஜூன் மாதத்தில் மட்டும் 230,000 க்கும் மேற்பட்டோர் வெளியேறியதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுடனான போரின் போது ஈரான் ஒவ்வொரு நாளும் சராசரியாக 30,000க்கும் மேற்பட்ட ஆப்கானியர்களை நாடு கடத்தியதாக ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையர் (UNHCR) அலுவலகம் மதிப்பிட்டுள்ளது, இது முன்பு சுமார் 2,000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஆப்கானிஸ்தானில் உள்ள UNHCR பிரதிநிதி அரபாத் ஜமால், எல்லைக் கடக்கும் இடத்தில் நடந்த காட்சியை, “மக்கள் பேருந்துகளில் வருகிறார்கள் என்றும், அவர்கள் பேருந்திலிருந்து வெளியேஇறக்கி விடப்படுகிறார்கள் என்றும், மேலும் அவர்கள் குழப்பமடைந்து, திசைதிருப்பப்பட்டு, சோர்வாகவும், பசியாகவும் இருக்கிறார்கள்” என்று விவரித்துள்ளார்.
ஈரானின் இந்த முடிவான நடவடிக்கையை மனிதாபிமான அமைப்புகள் மற்றும் சர்வதேச சமூகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. வறுமையால் முடங்கிய ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு லட்சக்கணக்கானோர் திரும்புவதால், நிலைமைகள் மேலும் சீர்குலையும் என எச்சரிக்கைகள் எழுந்துள்ளன.
![]()