இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணாசி நகரில், 22 வயதுடைய மாணவி ஒருவர் தனது காதலனால் கொலை செய்யப்பட்டதாக இந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
அறிவியல் முதுகலைப் பட்டப்படிப்பு (MSc) படித்து வந்த அல்கா பிந்த் எனும் மாணவியின் சடலம், வாராணாசியில் ரூபாபூர் பகுதியில் உள்ள விதான் பசேரா தாபா என்ற உணவகத்தின் ஒரு அறையில் திரை போர்த்தப்பட்டு கண்ணை குத்தும் வகையில் அவரது கழுத்து கத்தியால் அறுக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அல்கா புதன்கிழமை காலை தனது கல்லூரிக்கு சென்றதாக கூறப்பட்டிருந்த நிலையில், மாலை ஆகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இதன்படி பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், அன்றைய நாள் இரவு அவரது சடலம் உணவக அறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் அல்காவின் கைபேசி பதிவுகள் மற்றும் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து, அவரது காதலன் சாகப் பிந்த் என்பவரை கைது செய்துள்ளனர், இவர் மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும், படோகியில் உள்ள தனது தங்கை வீட்டில் மறைந்திருந்தபோதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
“காவல்துறையினரின் விசாரணையின் போது, திருமணம் செய்து கொள்ளவும், பணம் கேட்டும் அழுத்தம் கொடுத்ததால்தான் அல்காவை கொன்றதாக குற்றவாளி ஒப்புக்கொண்டார்,” என வாராணாசி துணை காவல் ஆணையர் ஆகாஷ் பட்டேல் கூறியுள்ளார்.

சாகப் பிந்த் கைது செய்யப்படும் போது, காவலர்களிடம் இருந்த துப்பாக்கியை பறித்து தப்ப முயற்சித்ததால், அவரது காலை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
புதன்கிழமை அல்காவை தாபாவுக்குள் அழைத்து சென்ற சாகப் பிந்த், அங்கு அவரது கழுத்தை வெட்டிவிட்டு கைப்பேசியை எடுத்துக்கொண்டு தப்பியதாகவும், தாபா ஊழியர் ஒருவர் அறையை சுத்தம் செய்யச் சென்றபோது சடலத்தை கண்டுபிடித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்த, அதேவேளை, அப்பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறை நடவடிக்கையில் அலட்சியம் காட்டியதாக குற்றம் சாட்டி, வியாழக்கிழமை வன்மையான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம், காதல் உறவுகள், திருமண அழுத்தம் மற்றும் பெண்கள் மீதான கொடூர தாக்குதல்களில் இருந்து பெண்களை பாதுகாப்பது குறித்த போராட்டம் என கூறப்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.



