காசா நகரம் மீது இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் தொடக்கம்!
காசா நகரை முழுமையாக கைப்பற்றும் திட்டத்தின் கீழ், இஸ்ரேலிய இராணுவம் தரைவழித் தாக்குதலின் முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
தற்போது காசாவின் புறநகரப் பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஜெய்டவுன் மற்றும் ஜபாலியா பகுதிகளில் துருப்புக்கள் செயலில் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சர் யோவ் காட்ஸ் ஒப்புதலை வழங்கியதையடுத்து இந்த தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக சுமார் 60,000 மேலதிகப் படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
காசா நகரில் உள்ள இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வெளியேறி தெற்கு காசாவில் உள்ள தங்குமிடங்களுக்கு செல்ல வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிடும் வாய்ப்புள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஹமாஸ், “அப்பாவி பொதுமக்களை குறிவைக்கும் போர் நடத்துவதற்காகவே இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரிக்கிறது” என குற்றம் சாட்டியுள்ளது.
இதேவேளை, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உள்பட பல நாடுகள், இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டித்துள்ளன. மெக்ரோன், இது பொதுமக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்துவதோடு, முழு பிராந்தியத்தையும் நிரந்தர போரின் சுழற்சியில் தள்ளும் என்று எச்சரித்துள்ளார்.
![]()