மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மொறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசி எறியப்பட்ட நிலையில் உயிரிழந்த ஆண் குழந்தை ஒன்றை சடலமாக இன்று சனிக்கிழமை (3/15/2025) மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த பெண் ஒருவர் அந்த குழந்தையை உரைப்பையில் கட்டிக் கொண்டு சென்று அதனை சந்திவெளி பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரம் கொண்ட மொறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ள நிலையில் இன்று காலை 9.00 மணியளவில் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரிவித்தனர்.
இதனையடுத்து பொலிஸார் நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குழந்தை சம்பவதினமான இன்று பிறந்துள்ளதாகவும் குழந்தையை பெற்றெடுத்து வீசிய பெண்ணை தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]