இந்தியா, மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் மல்ஹர்கஞ்ச் என்ற பகுதியில் சிறப்பு குழந்தைகளுக்கான காப்பகத்தில் கொலரா நோய் தாக்கத்தினால் கடந்த ஐந்து நாட்களில் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், தவறான மேலாண்மை, கூடுதல் சேர்கை, குழந்தைகளின் மருத்துவ அறிக்கைகளை முறையாக பராமரிக்கத் தவறியமை போன்று பல முறைகேடுகள் காப்பகத்தின் மேல் இருப்பது தெரிய வந்துள்ளது.
குறித்த காப்பகத்தில் சுமார் 200க்கும் அதிகமான குழந்தைகள் தங்கியுள்ளனர்.
குறித்த காப்பகத்தில் தங்கியிருந்த 8 வயது சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.
சிறுவன் இறந்த தகவலை அதிகாரிகளுக்கு கூறாமல் காப்பகத்தில் இருப்பவர்களே சிறுவனின் உடலை அடக்கம் செய்துள்ளனர்.
இதுதொடர்பில் தகவல் வெளியானதையடுத்து வலிப்பு ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்ததாக காப்பகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அதே காப்பகத்தில் 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உயர்நிலைக் குழுவின் முதல்கட்ட விசாரணையில் குறித்த காப்பகத்தில் கொலரா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் நோய் வேகமாக பரவி குழந்தைகளின் உயிரிழப்பு காரணமாக அமைந்தமை தெரிய வந்துள்ளது.
குறித்த காப்பகத்திலுள்ள குழந்தைகளை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு, கொலரா பாதிப்பினால் காப்பகத்தைச் சேர்ந்த 60 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அதில் மூன்று குழந்தைகளில் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.