காஸா தொடர்பான ட்ரம்ப்பின் திட்டத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கீகரிப்பு!
காஸா பகுதியில் நடைபெற்று வரும் போருக்கு முடிவுகாணும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நேற்று அங்கீகரித்தது.
சர்வதேச உறுதிப்படுத்தல் படையை அமைத்தல் மற்றும் பாலஸ்தீன அரசை உருவாக்கும் பாதையை உருவாக்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட திட்டமாக இது விவரிக்கப்படுகிறது.
குறித்த தீர்மானத்திற்கு பாதுகாப்புச் சபையின் 13 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதில் சீனா மற்றும் ரஷ்யா வாக்கெடுப்பில் இருந்து விலகினர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரண்டும் கடந்த மாதம் ட்ரம்ப்பின் 20 அம்சத் திட்டத்தின் முதல் கட்டத்துக்கு இணக்கம் தெரிவித்திருந்தாலும், தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இரு தரப்பும் தமது ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளன.
இஸ்ரேலில் இந்தத் திட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, பாலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிக்க வேண்டுமென திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமைவே எதிர்ப்பின் காரணமாகச் சொல்லப்படுகிறது.
மறுபுறம், ஹமாஸ், இந்தத் திட்டம் மூலம் அமெரிக்கா காஸாவிற்குள் சர்வதேச பொறிமுறையை திணிக்க முயல்கிறது என குற்றம் சாட்டி தீர்மானத்தை நிராகரித்துள்ளது.
இதற்கிடையில், தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டதில் மகிழ்ச்சி வெளியிட்ட ட்ரம்ப், இந்தத் திட்டம் தொடர்பான புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டம், நீண்டகாலமாக நீடித்து வரும் இஸ்ரேல்–பாலஸ்தீன மோதலுக்கு ஒரு முக்கிய திருப்பமாக அமையக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
![]()