தற்போது வெளியாகிய 2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பெறுபேறுகளில், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மிக முக்கியமான வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.
பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டுக்கு மேல் ஆன நிலையில், இப்பாடசாலையில் இருந்து முதன்முறையாக மாணவி அ. மேரி இசாயினி 9 பாடப்பிரிவுகளில் A தரங்களைப் பெற்று முழுமையான 9A சித்தி பெற்றுள்ளார். இதனூடாக, குறைவான வளங்களுடனும் வாய்ப்புகளுடனும் இயங்கும் இந்த கிராமப்புற பாடசாலை, இம்முறை O/L பரீட்சையில் மிக முக்கியமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
1919ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வரலாற்றில் இது முதல் முறையாக ஒரே மாணவி 9A பெறுவதால், இது பாடசாலைக்கே பெருமை சேர்க்கும் வகையில் மிக முக்கிய சாதனையாகும்.
மாணவி அ. மேரி இசாயினிக்கு மட்டுமல்லாது, இந்த சாதனையை சாத்தியப்படுத்த உதவிய ஆசிரியர் குழுவுக்கும், பெற்றோருக்கும் தற்போது பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.
(கிளிநொச்சி நிருபர் பரமசிவம்)



