அரசியலில் எதிர் நிலைப்பாட்டை கொண்டுள்ள நாங்கள் , கொள்கை ரீதியாக எதிர்ப்பாக உள்ள நாங்கள் மக்களுக்கு சேவை வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒரு அணியின் கீழ் ஒன்று சேர்ந்துள்ளோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் நகர சபை தவிசாளர் டானியல் வசந்தன் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையின் புதிய உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (ஜூலை 4) மன்னார் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் கடமையை உணர்ந்தவர்களாக எங்கள் அனைவரினதும் செயல்பாடுகள் அமைய வேண்டும். சிலர் கடமைகளில் இருந்து விலகி செல்கிறார்கள். நாங்கள் மக்களுக்கு அதிகாரம் வழங்கும் நோக்கத்துடன் தான் அரசியலுக்கு வந்துள்ளோம் என்றார். மேலும், நகர அபிவிருத்தி மற்றும் சம சேவை வழங்குவதே முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
அதேவேளை, வரவேற்பு நிகழ்வில் 16 உறுப்பினர்களில் 7 பேர் பங்கேற்றது தனக்கு கவலை அளிக்கின்றது என அவர் தெரிவித்தார். மேலும் இது மக்களிடம் தவறான செய்தியைக் கொடுக்கக்கூடும் என்று எச்சரித்தார்.
இந் நிகழ்வில் நகர சபை செயலாளர் தலைமையில் நடந்த நிகழ்வில் மத தலைவர்கள், உள்ளுராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.


(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)



