இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தில் நீராடுவதற்காக காணாமல் போன சிறுவனும், அவனது சகோதரன் மற்றும் இரு நண்பர்களுமாக சென்றுள்ளனர்.
காலை 11.30 மணியளவில் நீராடச் சென்ற இவர்களில் செல்வரத்தினம் றுசாந்தன் எனும் 14 வயதுடைய சிறுவன் நீரில் மூழ்கியுள்ளார். அதற்கடுத்து அவரது நண்பர்கள் அருகில் உள்ள இராணுவ முகாமிற்கும், உறவினர்களிற்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த சிறுவனை தேடும் பணியில் இரணைமடு மீனவர்களுக்கும், பிரதேச மக்களுமாக நீண்ட நேரமாக தேடி வந்த நிலையில் நேற்று மீட்க முடியாது போனது.
இன்று மீண்டும் தேடப்பட்ட நிலையில் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன சிறுவன் திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி கற்று வருவதுடன், முறிகண்டி வசந்தநகர் பகுதியில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.