நேற்றைய தினம்(09) இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதலாவது போட்டி நடைபெற்றிருந்தது.
பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதற்கமைய துடுப்பெடுத்தாடிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 381 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பாக பத்தும் நிஸ்ஸங்க 210 ஓட்டங்களையும் அவிஸ்க பெர்னாண்டோ 88 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.
பந்து வீச்சில் ஃபரீத் அஹ்மட் 2 விக்கட்டுக்களையும் முஹம்மட் நபி 1 விக்கட்டையும் ஆப்கானிஸ்தான் சார்பாக வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 339 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அஷ்மதுல்லா ஒமர்ஷை 149 ஓட்டங்களையும், முஹம்மட் நபி 136 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றிருந்தனர்.
இலங்கை அணிக்கு ப்ரமோத் மதுஷன் 4 விக்கட்டுக்களையும் துஷ்மந்த சமீர 2 விக்கட்டுக்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக பத்தும் நிஸ்ஸங்க தெரிவாகியிருந்தார்.
இப்போட்டியில் சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் இரட்டைச் சதம் பெற்ற முதலாவது இலங்கை வீரர் என்ற பெறுமையையும் பத்தும் நிஸ்ஸங்க பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியுடன் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.
இத்தொடரின் அடுத்த போட்டி நாளைய தினம் பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.