யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பயன்பாட்டிற்காக, இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள்(Dialysis Machines) இரண்டு இலங்கைக்கான கனேடிய உயர்தானிகரால் இன்று கையளிக்கப்பட்டன.
இதற்கான நிகழ்வானது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.
இதன்போது “கனடா செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் அனுசரணையில் 64 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் எஸ்.குமரவேல் மற்றும் புதிய வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் த.காண்டீபன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி உதவித்திட்ட கையளிப்பு நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் “எரிக் வாஸ்” (Eric Walsh) கலந்து கொண்டு வைத்திய உதவிப் பொருட்களை கையளித்திருந்தார்.
மேலும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் V.P.S.D. பத்திரன, யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் ,செந்தில்குமரன் நிவாரண நிறுவன ஸ்தாபகர் டி.செந்தில்குமரன்,
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் போதனா மருத்துவமனையின் ஆலோசகர் வைத்தியர் ஆ.தங்கராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
மேற்படி இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களின் உதவியுடன் நாளாந்தம் 4 நோயாளர்களுக்கு இரத்த சுத்திகரிப்பு சேவையை வழங்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது.