பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த மூன்று காவல்துறை பொறுப்பதிகாரிகள் உட்பட நான்கு காவல்துறை அதிகாரிகளைப் பணி இடைநீக்கம் செய்வதற்குப் பதில் காவல்துறைமா அதிபர் நேற்று நடவடிக்கை எடுத்துள்ளார்.
தில்ஷான் மதுசங்க என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, சுமார் 6 நாட்கள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீரகெட்டிய காவல்நிலையப் பொறுப்பதிகாரி, தங்காலை பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, கம்புறுபிட்டிய பலவின முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் கல்கிசை காவல் நிலையத்தின் சார்ஜென்ட் ஆகியோரே இவ்வாறு பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு காவல்துறை அதிகாரிகளையும் தலா 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு மாத்தறை மேல் நீதிமன்றம் கடந்த ஜனவரி 27ஆம் திகதி உத்தரவிட்டது.
மாத்தறை – மாலிம்பட காவல் நிலையத்தில் கடமையாற்றியபோது, சுமார் ஆறு நாட்கள் தில்ஷான் மதுசங்க என்ற இளைஞரைக் கைது செய்து, தடுத்து வைத்து, சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பாக, காவல்துறை விசேட விசாரணைப் பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் இந்த அதிகாரிகளுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.