சிறுமிகளுக்கு ஆபாசபடம் காட்டி வந்த 57 வயதுடைய பாடசாலை அதிபர் கைது!
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5ம் ஆண்டில் கல்விகற்றுவரும் சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படம் காட்டி வந்த 57 வயதுடைய பாடசாலை அதிபர் ஒருவரை நேற்று புதன்கிழமை (21) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5ம் ஆண்டில் 3 சிறுமிகள் 3 சிறுவன்கள் உட்பட 6 பேர் கல்விகற்று வருகின்றனர். இந்த நிலையில்; குறித்த மாணவர்கள் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அந்த மாணவர்களுக்கு பாடசாலை முடிவுற்ற பின்னர் மேலதிகமாக மாலையில் அதிபர் கற்பித்து வந்துள்ளார்.
இதன் போது குறித்த அதிபர் மாணவர்களுக்கு தனது கையடக்க தொலைபேசியில் இருந்து ஆபாச படங்களை காட்டிவந்துள்ள நிலையில் ஒரு மாணவி மாலை நேர வகுப்பிற்கு போகமுடியாது என பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அதற்கான காரணத்தை கேட்டபோது சிறுமி அதிபரின் இந்த ஈனச் செயல் தொடர்பாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவதினமான நேற்று இரவு பெற்றோர் 119 ம் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்ததையடுத்து பொலிசார் பாதிக்கப்பட்ட 3 மாணவிகளான சிறுமிகளிடம் இருந்து வாக்கு மூலத்தை பதிவு செய்ததுடன் 57 வயதுடைய அதிபரை கைது செய்துள்ளனர்
இதில் கைது செய்யப்பட்ட அதிபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான பெண்கள் சிறுவர்கள் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
![]()