ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜீ.எல்.பீரிஸ்!!!
ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கும், பாராளுமன்றத்தின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கும் நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும்,பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் புதன்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் பதவிக்காலத்தை நீட்டித்துக் கொள்வதற்கு மக்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என்பதை தெரிந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி தனது கட்சியின் செயலாளர் ஊடாக இவ்வாறான கூற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் ஜனாதிபதிக்கும், இந்த பாராளுமன்றத்துக்கும் மக்களாணை என்பதொன்று கிடையாது. ஆகவே தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என்று மக்கள் கோருகிறார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதும், போட்டியிடாமல் இருப்பதும் ஜனாதிபதியின் தனிப்பட்ட தீர்மானம். அவரது தனிப்பட்ட தீர்மானங்களை நாட்டு மக்கள் ஆராயவில்லை. ஜனநாயகத்துக்கு விரோதமாக செயற்பட்டால் நாட்டில் மீண்டும் போராட்டம் தோற்றம் பெறும். வரலாற்றில் தான் தவறான எடுத்துக்காட்டாக அடையாளப்படுத்தப்படுவதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()