Tamil News Channel

தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்குமாறு ஆதரவு தெரிவித்த ஆனந்தங்கரி ஒன்றிணையுமாறும் அழைப்பு ..!

20250503_132307

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

70 வருட அரசியல் அனுபவத்துடன் நான் இருக்கின்றேன். கடந்த காலங்களில் திட்டமிட்டு பிழையான கருத்துக்கள் கூறப்பட்டு அரசியல் மோசடி செய்யப்பட்டது.

பல சந்தர்பங்களில் MP ஆவதற்கும், ஏனைய பல வசதி வாய்ப்புக்களுடன் வாழக்கூடிய வகையில் அரசாங்கங்கள் முனைந்தன. ஆனாலும் அதற்கு நான் சாரவில்லை. கை சுத்தமான அரசியலையே செய்தேன்.

இன்று அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வாக்குகள் முக்கிய இடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு விதமான கட்சிகளாகவும், பிழையாக இணைந்த கட்சிகள் பலவும் என போட்டியிடுகின்றன.

நல்ல கட்சி ஒன்றை மக்களுக்கு காண்பிக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. அந்த கடமையை நான் செய்ய வேண்டும்.

எமது கட்சியிலிருது சிலர் பிரிந்து சென்று தனியாக பயணித்தனர். அது தொடர்பில் பேச விரும்பவில்லை. யார் சரி யார் பிழை என்று பேசும் நேரமல்ல.

கடந்த காலங்களில் விட்ட தவறுகளை மூடி மறைக்க நல்ல சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைத்துள்ளது. மறியலில் இருக்கக் கூடிய பலர் பாராளுமன்றத்திலும், வெளியிலும் உள்ளனர்.

இந்த அரசும் பதவிக்கு வந்தது நியாயமான முறையில் இல்லை. வரும் போது கூறிய அல்லது எதிர்பார்த்த எதையும் அவர்கள் செய்யவில்லை.

2004 க்குப் பின்னர் வந்த எந்த அரசுகளும் ஜனநாயகமாக உருவாகவில்லை. ஜனநாயகம் அழிந்துவிட்டது. அதனை நாங்கள் இன்று அனுபவிக்கின்றோம். நாடு அழிவுக்குள் செல்கின்றது.

நான் தமிழரசுக் கட்சியை சேர்ந்தவன் இல்லை. தமிழரசுக் கட்சியுடன் வேறு கட்சிகளையும் இணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உருவானது. அதன் உருவக்கத்தில் நானும் இருந்தேன். பல ஆண்டு பகைமைகளை மறந்து தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்டது.

அந்த கட்சியில் நான் தொடர்ந்தும் செயலாளர் நாயகமாக இருக்கின்றேன். மீண்டும் அவ்வாறான ஒரு அரசியல் நிலமை உருவாகியுள்ளது. இது காலத்தின் தேவையாகவும் உள்ளது.

எல்லா கட்சிகளையும் மூடி வையுங்கள். நீங்கள் மக்களுக்கு செய்தது போதும். எல்லா வகையிலும் அனுபவித்துவிட்டீர்கள். இனியும் மக்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்.

நான் குற்றம் ஏதும் செய்ததில்லை. களவு எடுத்ததுமில்லை. எனது கை சுத்தமானது. அவ்வாறு என்னில் குற்றம் ஏதும் கண்டிருந்தால் கோல்பேசில் கொண்டு சென்று அடியுங்கள்.

நான் முடிவெடுத்துவிட்டேன். எமது கட்சிக்கு ஆபத்து இருப்பதாக நான் உணர்கிறேன். அவ்வாறான நிலையிலிருந்து நான் இந்த அழைப்பை விடுகின்றேன்.

தமிரசுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் எம்முடன் இணையுங்கள். அவ்வாறு இணைய வேண்டிய காலம் இதுவாகும். தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வா உருவாக்கிய கட்சியே தமிழர் விடுதலைக் கூட்டணி.

எல்லாரும் இணைந்து ஒன்றாக பயணித்த எமது கட்சி பல தியாகங்களை செய்தது. அந்த கட்சியிலிலிருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைவதே பொருத்தமானது. தமிழரசில் இருந்து பிரிந்தவர்கள் பெரும் தலைவருக்காக எம்முடன் இணையுங்கள்.

மற்றவர்கள் அனுபவித்து போதும். ஒதுங்குங்கள். மக்களை வருத்தி அநியாயம் செய்தும், மக்களை துன்புறுத்தியும் உள்ளனர்.

இம்முறை தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் போட்டியிடவில்லை. மீண்டும் ஒன்றாக சேர்ப்பதற்காகவே இவ்வாறு நாம் தனித்து போட்டியிட விரும்பவில்லை.

இன்று தமிரசுக் கட்சி பிரிந்து 5 ஆறு பிரிவுகளாக உள்ளது. எமது இந்தக் கட்சியையும் உடைக்க முளைத்தனர். ஆனால் அது முடியவில்லை. நாங்கள் ஒருமித்து பயணிக்க வேண்டும். அதற்கான சூழல் உள்ளது.

எனவே, இந்த தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தலின் பின்னர் அனைத்தையும் களைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைய வேண்டும்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொறுப்புக்களை பகிர்ந்து ஏற்க அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

(கிளிநொச்சி நிருபர்:- ஆனந்தன்)

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts