திருகோணமலை விவகாரம்-காவல்துறையின் தலையீடு குறித்து சஜித் பிரேமதாச கேள்வி!
திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி பொதிராஜ விஹாரையைச் சுற்றி நேற்று ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக காவல்துறையின் செயல்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இத்தகைய நடவடிக்கைகள் இனவெறி பதற்றங்களை தூண்டும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.
அரசியலமைப்பின் 2ஆம் அதிகாரத்தை மேற்கோள் காட்டிய அவர்,
புத்தமதத்திற்கு முன்னுரிமை அளிக்கும் போதிலும் பிற மதங்களுக்கு மரியாதை வழங்கப்பட வேண்டும் என்பதையும் நினைவூட்டினார்.
1951ல் நிறுவப்பட்டு 2010ல் புத்தமத அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த ஆலயம், சட்டபூர்வமான வழிபாட்டு தலமாக விளங்குவதாகவும் அவர் கூறினார்.
புத்தர் சிலை அமைத்தல் மற்றும் தர்மப்பள்ளி கட்டிடம் தொடர்பாக காவல்துறையினரால் வழங்கப்பட்ட உத்தரவுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், இது தேவையற்ற இனவெறி பதற்றங்களை உருவாக்கக்கூடும் என்றும் பிரேமதாச கண்டனம் தெரிவித்தார்.
“இந்த விவகாரத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், மூன்று நிகாய சங்க நாயக்கர்களுடன் கலந்துரையாடி தீர்வு கண்டுகொள்ள வேண்டும். அபிவிருத்தி பணிகளை தடுக்க காவல்துறையை பயன்படுத்துவது முற்றிலும் தவறு. அரசாங்கத்துக்குத் அரசியலமைப்பு தெரியாவிட்டால் அதை மீண்டும் படிக்கட்டும்,” என அவர் விமர்சித்தார்.
மேலும், இந்த விவகாரத்தை எழுப்ப முயன்ற எதிர்க்கட்சி எம்.பி தயாசிறி ஜயசேகராவை தடுத்தது ஜனநாயக உரிமை மீறல் என சபாநாயகரையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
இந்த பதற்றம், ஆலயத்தில் உள்ள தர்மப்பள்ளி பகுதியில் புத்தர் சிலையை நிறுவ முயன்றபோதுதான் ஏற்பட்டது. சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவில், குறித்த இடம் ஒரு மத பாரம்பரிய தலம் என ஒரு துறவி தெரிவிப்பதும் காணப்படுகிறது.
ஆனால், அந்த நிலம் கடலோர பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் குறித்து புகார்கள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்த இடத்தில் எந்தவித மேம்பாட்டு பணிகளையும் தடைசெய்யும் நீதிமன்ற உத்தரவு இருப்பதாக காவல்துறையும் தெரிவித்துள்ளது.
![]()