மாணவர்களிடையே சமய அறிவையும் அதன் மூலம் ஒழுக்கநெறியையும் வளர்த்தெடுக்கும் நோக்குடன் திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவில் வருடாந்த மஹோசவத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் நடாத்தப்படும் சமய அறிவுப்போட்டி இம் முறையும் நடைபெற்றுள்ளது.
அதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சி அண்மையில் தீர்த்தோற்சவம் அன்று ஆலய முன்றலில் இடம்பெற்றது.
தரம் 3 தொடக்கம் 11 வரை பயிலுகின்ற 215 மாணவர்கள் எழுத்துமூலப் பரீட்சையில் தோற்றியிருந்தார்கள். இவர்களில் 152 பேர் பரிசுக்குரியவர்களாகக் தெரிவுசெய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
கல்வியங்காடு இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் 3 பயிலும் செல்வி தீபிகா விஜே 100 புள்ளிகளைப் பெற்று தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார். இப் பதக்கம் ஆண்டுதோறும் அமரர் சி. பொன்னுத்துரை, தாயார் அமரர் பொ. தங்கமாணிக்கம் ஆகியோர் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிகழ்ச்சி யில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆலய பிரதமகுரு மஹோற்சவகுரு ஞானானந்த குருக்கள் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். பரீட்சைக் குழு சார்பாக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் போ.ஐங்கரநேசன் ,ஆனைப்பந்தி அமெரிக்கன் மிசன் பாடசாலை அதிபர் யோ.ஜெக ஆனந்தம் பங்கேற்றிருந்தார்கள் .