2024 ஆம் ஆண்டுக்குரிய அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கனிஸ்ர மெய்வல்லுனர் தடகளப்போட்டியில் 3000 ஆயிரம் மீற்றர் நீண்டதூர ஓட்டப்போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன் கட்டு இடதுகரை அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் கல்விகற்று வரும் ஜெ.விதுஷன் முதல் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்த போட்டி 14.07.2024 அன்று நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வறுமைக்குட்பட்ட குடும்பங்களை கொண்ட சரியான அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இயங்கிவரும் முத்தையன் கட்டு அ.த.க பாடசாலையில் விளையாட்டு பயிற்சி ஆசிரியர் பு.ஜனன்தன் பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டு பயிற்சினை வழங்கிவருகின்றார்.
அவரின் பயிற்சியில் உருவான மாணவன் இன்று அகில இலங்கைரீதியில் சாதனை படைத்துள்ளான். 3000 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் 9 நிமிடம் 2 செக்கன் 10 வினாடிகளில் ஓடி முடித்து சாதனை படைத்துள்ளார்.
குறித்த பாடசாலையில் பல விளையாட்டு வீரர்கள் இருந்தாலும் பயிற்சிகளை மேற்கொள்ள சரியான மைதானம் இல்லாத நிலையிலும் மாணவர்கள் விளையாட்டில் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.