ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (15.07) பரிசீலிக்கப்படவுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்படவுள்ளது.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் உரிய முறையில் நிறைவேற்றப்படாததன் காரணமாக, அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தி அங்கீகரிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அரசியலமைப்பை மீறும் செயலாகும் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டத்தரணி அருண லக்சிறி உனவடுனவால் கடந்த வெள்ளிக்கிழமை இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் 70வது சரத்து திருத்தத்தின்படி தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தை ஓராண்டு நிறைவடைந்ததன் பின்னர் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லாமல் செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மனுதாரர் உரிய மனு மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மற்றும் இந்த திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு ஜனாதிபதி கையொப்பமிடாத காரணத்தினால் இதனை சட்டமாக கருத முடியாது எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு இருக்கும் போது 19வது திருத்தத்தை சட்டமாக ஏற்றுக்கொள்வது தவறானது என அவர் கூறியமை குறிப்பிடத்தக்கது.