மாணவர்களே, பரீட்சை எழுத செல்லும் போது விரைவாக வீட்டிலிருந்து கிளம்பி விடவும்.
பாடசாலைக்கு சென்ற பின், மற்ற மாணவர்கள் மற்றும் நண்பர்களுடன், கேள்வி மற்றும் பதில்களை பற்றி கலந்து ஆலோசிக்காமல் நேராக பரீட்சை எழுதும் அறைக்கு செல்லவும். ஏனெனில் அவர்கள், நாம் படிக்காத கேள்விகளை விவாதிக்கும் போது அது நம்மை பலவீனப்படுத்தி நம்பிக்கை இழக்க வைக்கும்.
பரீட்சை அறைக்குள் நுழையும் முன் சட்டை, பான்ட் பாக்கெட் போன்றவற்றை முழுவதுமாக பரிசோதித்து, தேவையற்ற பேப்பர்களை தூக்கி எறிந்துவிடுங்கள்.
பரீட்சை எழுதுவதற்கு பயன்படுத்தும், பேனா, பென்சில், அழி , ஸ்கேல், அடையாள அட்டை போன்றவற்றை மட்டும் எடுத்துச் செல்லவும்.
நீங்கள் பரீட்சை எழுதும் நாற்காலி மற்றும் மேசையில் ஏதாவது எழுதியிருந்தால், அதனை அழித்து விடுங்கள் அல்லது பரீட்சை கண்காணிப்பாளரிடம் கூறி, அதை அழிக்க முற்படுங்கள்.
வினாத்தாளை பரீட்சை கண்காணிப்பாளர் கொடுத்தவுடன், பதட்டப்படாமல் கவனமாக படிக்கவும். தெரியாத வினாக்கள் முதலில் வந்தால் மனம் தளராது தொடர்ந்து படிக்கவும்.
பரீட்சை எழுதும் போது நேரத்தை கடைபிடிக்கவும். உதாரணமாக பரீட்சைக்கான மதிப்பெண்கள் 150, நேரம் 3 மணிநேரம் என வைத்துக் கொள்வோம். அதாவது 180 நிமிடத்தில் 150 மதிப்பெண்களுக்கு பரீட்சை எழுத வேண்டும். ஆகவே ஒரு மதிப்பெண்களுக்கு ஒரு நிமிடம் என மனதில் கொண்டு பதிலை வேகமாக எழுத வேண்டும்
பரீட்சை எழுதும் போது முதலில் பெருவினா, சிறுவினா, குறுவினா என்ற அடிப்படையில் வினாக்களை எழுதவும்.
பரீட்சை எழுதும் போது, முதலில் தெரிந்த வினாக்களுக்கும், பின் ஓரளவு தெரிந்த வினாக்களுக்கும், இறுதியாக பதில் தெரியாத வினாக்களுக்கும், உங்களுக்கு தெரிந்த பதிலை எழுதவும். ஒரு வினாவையும் விடாமல் அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுதவும்.
பதில்களை இடைவிடாமல் தொடர்ந்து எழுதாமல், குறிப்பு குறிப்பாக எழுதி, முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடிட்டு காட்டவும்.
சமன்பாடு, சூத்திரம் போன்றவற்றை கட்டம் போட்டு காட்டவும், தேவையான படங்களை பதிலுக்கு அருகிலேயே அழகாக வரையவும்.
விடைகளை அடிக்கோடிடும் போது பல நிற பேனாக்களை பயன்படுத்த வேண்டாம். கருப்பு, நீல நிற பேனாக்கள் மற்றும் பென்சில்களை பயன்படுத்தவதே நல்லது.
விரைவில் பரீட்சை எழுதி முடித்தால், விடைத்தாளை உடனே கண்காணிப்பாளரிடம் கொடுக்காமல், மீண்டும் ஒரு முறை விடை, கேள்வி எண், பதிவு எண் போன்றவற்றை சரிபார்த்த பின் விடைத்தாளை கொடுக்கவும்.
பரீட்சை எழுதும் போது பதில்களை அடித்து கிறுக்கி எழுதாமல், கவனமாக, தெளிவாக எழுதவும்.