இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (16) கொழும்பில் நடைபெற்ற ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (ISA) பிராந்தியக் குழுவின் ஏழாவது கூட்டத்தின் இரண்டாம் நாளில் பிராந்திய சூரிய சக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நிலையான வளர்ச்சியின் மூலம் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த நாட்டின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.

‘பன்முகத்தன்மை மற்றும் வாய்ப்புள்ள ஒரு பிராந்தியத்தில் சூரிய ஒத்துழைப்பை மேம்படுத்துதல்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கை உயர்மட்ட உரையாடலின் துணைத் தலைவராக இருந்தது.

தொடக்க உரையை வழங்கிய பிரதமர் அமரசூரிய, பிராந்திய அளவில் சூரிய சக்தியின் வளர்ச்சியையும் அதனை அடிப்படையாகக் கொண்டு எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதை இலங்கையின் முக்கியத் திட்டமாக எடுத்துக் கொண்டு இருப்பதை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், இலங்கைக்கும் ISA பிராந்தியக் குழுவுக்கும் இடையேயான கூட்டாண்மையை குறிக்கும் வகையில், சாலை வரைபடத்தின் அதிகாரப்பூர்வ கட்டமைப்பு கையொப்பமிடப்பட்டு எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியிடம் வழங்கப்பட்டது.

உரையாற்றிய அமைச்சர் ஜெயக்கொடி, “சூரிய சக்திக்கான போர்” என்ற அரசாங்க முன்முயற்சியை வெளிப்படுத்தி, 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 70% புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை அடைவதற்கான திட்டங்களைப் பகிர்ந்துகொண்டார். இதன் மூலம் கூரை சூரிய மின்சக்தி அமைப்புகளின் விரிவாக்கமும், பசுமையான மற்றும் மீள்தன்மை கொண்ட எதிர்காலத்திற்கான அடித்தளம் அமைப்பதும் சாத்தியமாகிறது.

மேலும், மொரட்டுவ பல்கலைக்கழகம் சூரிய சக்தி கண்டுபிடிப்புகளுக்கான முக்கிய அறிவு மற்றும் ஆராய்ச்சி மையமாக அடையாளம் பெற்றுள்ளது.

இந்த மாநாடு பிராந்திய அரசுகளுக்கிடையில் புதிய கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கான தளமாகவும், சூரிய சக்தி தொழில்நுட்ப முன்னேற்றங்களை பகிர்வதற்கான சிறப்பு சூரிய புத்தாக்க கண்காட்சியையும் ஏற்பாடு செய்தது. இதில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்.

நிகழ்வில் இலங்கைக்கு இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ISA இயக்குநர் ஜெனரல் ஆஷிஷ் கன்னா மற்றும் ஆசியா, பசுபிக் பிராந்தியத்தை சேர்ந்த 124 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here