மத்திய காசாவிலுள்ள மகாஸி முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் நேற்றைய தினம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இத்தாக்குதல் காரணமாக நேற்றைய தினம்(01) மாத்திரம் 156 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகம் முழுவதும் மக்கள் புதுவருடத்தை கொண்டாடும் தருணத்தில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் பொதுமக்கள் கொள்ளப்படுவது வருத்தமளிப்பதாக சர்வதேச அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ஹமாஸ் அழிக்கப்படும் வரை காசாவில் பல மாதங்களுக்கு போர் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனைத் தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் மேலும் கூறுகையில்,
ஹமாஸுக்கு எதிரான போர் அனைத்து முனைகளில் இருந்தும் நடக்கிறது. இந்தப் போரில் வெற்றி காண இன்னும் சில கால அவகாசம் தேவைப்படுகிறது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தாக்குதலை நடத்துவதோடு வீரர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை ஹமாஸை சேர்ந்த 8,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வடக்கு எல்லையில் இருந்து ஹிஸ்புல்லா தாக்குதல் தொடர்கிறது.
ஹிஸ்புல்லா படையினர் தாக்குதலைத் தொடர்வார்கள் என்றால், அவர்கள் இதுவரை கனவிலும் நினைத்திராத பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.