Thursday, March 12, 2026

மன்னாரில் தமிழ் மக்களுக்கு எதிரான அரச வன்முறை: ஜனநாயக உரிமைகளை அழிக்கும் முயற்சி ; ஸ்ரீகாந்தா !

Must Read

மன்னாரில் தமது இருப்பின் உரிமைக்காக போராடும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை வன்முறையானது மீண்டும் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என  தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என். ஸ்ரீகாந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாட்டின் வீதியிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கு எதிரான அம்மாவட்ட மக்களது உண்மையான நீதியான போராட்டத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அது சட்ட விரோதமானது என கருதியிருந்தால் அதில் ஈடுபட்ட மக்களை சட்ட ரீதியாக கைது செய்திருக்க வேண்டும்.

ஆனால் அவர்களை தாக்குவதற்கும் காயங்களை ஏற்படுத்துவதற்கும் அரசுக்கு எந்த அதிகாரமும் இருக்க முடியாது.

அனுர தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு வருடம் நிறைவுக்கு வரும் இந்த சூழ்நிலையில், அரசு நடத்தி இருக்கிற இந்த காட்டு தர்பார், என்பது, அரசுக்கு எதிரான ஜனநாயக ரீதியான போராட்டங்கள், பாரிய அளவில் பரந்து விரிவடையும் பொழுது அரசு அவை தொடர்பிலே எந்தகைய அணுகு முறையை கையாளும் என்பதற்கு ஒரு  எடுத்துக்காட்டாகவே நாங்கள் கருதுகிறோம்.

அத்துடன் இந்த அடாவடியை அங்கீகரிக்கவோ அல்லது ஆமோதிக்கவோ ஜனநாயகத்தை மக்களது அடிப்படை உரிமைகளை மதிக்கின்ற எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்கள் கடந்த காலத்தில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில், காற்றாலை திட்டம் தொடர்பில் ஒரு பரந்த அளவிலானதும் அந்த திட்டத்திற்கு எதிராக மன்னார் தீவில் எழுந்திருந்த நிலையில்,  80 நாட்களாக இந்த போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், அதை நசுக்க இந்த அரசு முயற்சிக்கின்றது.

இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் வரை சென்று போராடும் மக்கள், இந்த திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த பின்னணியிலே அரசாங்கம் இந்த பிரச்சினையை நிதானமாக கையாள இந்த அரசு முனைந்திருக்க வேண்டும்.

உண்மையில் என்ன நடந்தது என்பதை ஆராய்ந்திருக்க வேண்டும்.  கடந்த வெள்ளிக்கிழமை இரவிரவாக  காற்றாலை உபகரணங்கள் உதிரிப்பாகங்கள் இயந்திரங்கள் எல்லாம் மன்னார் தீவுக்குள் கொண்டுவரப்பட்ட போது அதற்கு மக்களுடைய எதிர்ப்பலை எழுந்திருந்த நேரத்தில், அதை நிதானமாக கையாள அரசு முயற்சித்திருக்க வேண்டிய நிலையில், அரசு காட்டுமிராண்டித்தனமான முறையில் அந்த மக்களை அடித்து துவைத்து இருக்கிறது.

இதன் ஊடாக ஜனநாயக போராட்டங்களில் ஈடுபடுகிற மக்களுக்கு மாத்திரமல்ல, தமிழ் மக்களுக்கும் கூட இந்த அரசாங்க ஒரு செய்தியை சொல்லி இருப்பதாகத்தான்  கருத வேண்டி இருக்கிறது.

அதாவது, அரசு எதிர்ப்பு போராட்டங்கள் ஒரு எல்லையைத் தாண்டுமாக இருந்தால் அரசாங்கம் தன்னுடைய பலத்தை மக்கள் மீது பிரயோகிக்க தயங்காது என்பதை அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.

இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என கோருகின்றேன்

இப்பொழுது கூட நேரம் கடந்து விடவில்லை.  அரசாங்கம் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி தன்னுடைய நிலைப்பாட்டில் கூட அவர்களுக்கு எடுத்துரைத்து ஒரு நிதானமாக தீர்வுக்கு வர முடியும். ஆனால் நசுக்க முடியும் என்ற எண்ணத்திலே அரசாங்கம் செயற்படுமாக இருக்கின்றது.

குறிப்பாக தமிழ் தேசியம் சார்ந்த அரசியல்வாதிகள் இந்த உண்மைகளை உணர வேண்டும்.என அவர் தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

(யாழ் நிருபர்- லோஜன் விஜய்குமார்)

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights