மன்னார் நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகளுடன் நான்கு(4)சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை (6) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடற்படை புலனாய்வு பிரிவு வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் மது வரி ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கடற்படையினர் மற்றும் மன்னார் மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி டி.பி.அளவத்தகம தலைமையிலான மது வரி அதிகாரிகள் இணைந்து தலைமன்னார் பிரதான வீதி,நடுக்குடா கடற்கரை பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது சந்தேகத்திற்கிடமான இரண்டு படகுகளில் காணப்பட்ட பொதிகளை சோதனை செய்த போது குறித்த படகுகளில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பீடி இலைகளை மீட்டனர்.
குறித்த இரு படகுகளில் இருந்தும் 40 மூடைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 1250 கிலோ பீடி இலைகள் இவ்வாறு மீட்கப்பட்டது.
மேலும் குறித்த படகுடன் கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களையும் மீட்கப்பட்ட பீடி இலை மூடைகளையும் கடற்படையினர் மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
(மன்னார் நிருபர்-எஸ்.ஆர்.லெம்பேட்)