மருதானை பொலிஸ் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்ட தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக் கொண்டுவரப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார் .
மருதானை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ள தமிழ்ப் பெண்ணின் தற்கொலை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
குறித்த செய்திக் குறிப்பில்,
கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது நேற்று (22) உயிரிழந்துள்ளார்.
மருதானை பொலிஸார் இம்மரணத்தைத் தற்கொலை என்று தெரிவித்துள்ளதோடு , கஞ்சா வைத்திருந்ததாலேயே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.
செய்தியறிந்து சடலத்தை பார்வையிட்ட தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் இம்மரணம் தொடர்பாகச் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர்.
காலங்காலமாக இலங்கையில் பொலிஸார் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சோடித்து வந்துள்ள நிலையில் , இந்தப் பொலிஸ் நிலையம் மரணம் தொடர்பான உண்மை நிலையை வெளிக்கொண்டு வருவதற்கு எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.