மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மலேசியா உயர் கல்வி அமைச்சர் ஷாம்ப்ரி அப்துல் காதிரை சந்தித்து இலங்கைக்கும் மலேசியாவுக்குமான கூட்டுத்திட்டம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
மலேசியாவில் உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் தற்போதைய சட்டத்தின் படி ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் இலங்கைக்கு திரும்பி விசாவைப் புதுப்பிக்கும் நிலை காணப்படுகிறது.
ஆதலால் அவர்களின் பட்டப்படிப்பை நிறைவு செய்யும் காலமான 4 வருடங்களுக்கு விசா காலத்தை அதிகரித்து தருமாறு மலேசியா உயர் கல்வி அமைச்சர் ஷாம்ப்ரி அப்துல் காதிரிடம் ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆளுநரின் வேண்டுகோளுக்கு இணங்க அமைச்சர் அதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் முருகன் மற்றும் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் சுமங்கல டயஸ் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.