மலையக தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவினால் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நியமனக் கடித்தத்தில் மலையகத் தமிழர்களை இலங்கைச் சமூகத்தில் முழுமையாக இணைத்துக்கொள்வது குறித்து அறிக்கையிடுவதற்கான பொறுப்பும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இவர் பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான நலன்புரி விடயங்கள், மகளிர் மேம்பாடு, சிறுவர் நலத்திட்டங்கள்,தமிழ் பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து பாடசாலை சுகாதார சேவைகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரான வடிவேல் சுரேஷ் பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.