மாலபே, கஹந்தோட்டை வீதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 11 கிலோகிராம் 02 கிராம் ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) மற்றும் 180 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபரிடம் இருந்து ரூ. 255,000 ரூபா பணம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் (PNB) அதிகாரிகளுக்கு நேற்று (22) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மல்வானை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் இன்று (23) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (PNB) மேற்கொண்டு வருகிறது.