வாகரை கிருமிச்சை குளத்தில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன மீனவர் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வாகரை கிருமிச்சை குளத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போனவரை கடற்படையினரின் உதவியுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (7) நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
கிருமிச்சை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான யசோதரன் புண்ணியராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வழமைபோல சம்பவ தினமான சனிக்கிழமை அதிகாலையில் வீட்டில் இருந்து கிருமிச்சை குளத்தில் மீன்பிடிப்பதற்காக சென்றவர் பகலாகியும் வீடு திரும்பாததையடுத்து அவரை உறவினர்கள் தேடிச் சென்ற போது அவர் காணாமல் போயுள்ளதுடன் குளத்தின் கரையில் அவருடைய தோணி இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து இயந்திர படகு மூலம் கடற்படையினர் குளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை தேடுதலின் போது நீரில் மூழ்கிய நிலையில் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.