முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைக்கு அழைத்த விடயத்தை தாம் வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நல்ல விடயங்களுக்குத் தாம் ஆதரவு வழங்குவதாகவும் செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.
நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இந்த விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் வாசஸ்தலங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானங்களையும் தாம் வரவேற்பதாகக் கூறினார்.
இவ்வாறான அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெற வேண்டும் எனவும் எதிர்வரும் தேர்தலுக்கான யுக்தியாக இந்த விடயங்கள் அமைந்து விடக்கூடாது எனவும் அரசாங்கத்தை செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியிருந்தார்.
தூய்மையான ஒரு திட்டத்தை முன்னெடுக்கும் அரசாங்கம் பலதரப்பட்ட விடயங்களில் கவனம் செலுத்தும் போதே இந்த திட்டத்தில் வெற்றியடைய முடியும் என சுட்டிக்காட்டினார்.
வடக்கு,கிழக்கில் உள்ள மக்களின் காணிகளை முப்படையினர் அபகரித்துள்ளதாக சபையில் சுட்டிக்காட்டினார்.
முப்படைகள் மக்களின் காணிகளை அபகரிக்கும் விடயத்தை ஒழிக்க வேண்டும் எனவும் இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.
இவற்றை நடைமுறைப்படுத்துமிடத்து க்ளீன் ஸ்ரீலங்கா எனும் திட்டம் மேலும் வளர்ச்சியடையும் எனக் குறிப்பிட்டார்.