போதைப் பொருள் குற்றவாளிகளை கைது செய்யும் யுக்திய திட்டத்தை அமெரிக்காவானது கூர்மையாக கவனித்துவருகின்றது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்கின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் ,
குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய விசேட நடவடிக்கை தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகின்றது.
இந்த நடவடிக்கை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பில் அமெரிக்கா கவனத்தை செலுத்தியுள்ளது.
போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது இன்றியமையாதது. சட்டத்தை அமுல்படுத்தல், சட்டத்தின் கொள்கைகளை நிலைநிறுத்தல் மற்றும் அக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தல் என்பன முக்கியமானவை.
இந்த சமநிலையை நிலைநிறுத்துவது நீதி மற்றும் பொது நம்பிக்கையை பேணுவது முக்கியமானது என தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக யுக்திய நடவடிக்கையானது சித்திரவதை, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை, தன்னிச்சையான கைதுகள் மற்றும் நீதி நடவடிக்கைகளின் போது தடுத்து வைக்கும் சம்பவங்கள் போன்ற அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பாக ஆணைக்குழுவிற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.