
வவுனியாவில் கிணற்றில் தவறி விழுந்து யுவதி பலி..!
வவுனியா, சமளங்குளம் பகுதியில் நேற்றைய தினம்(17) கிணற்றில் தவறி விழுந்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, சமளங்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய தவரூபன் லக்சிகா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று மாலை குறித்த யுவதி கிணற்று மோட்டரை இயக்க முயற்சித்த போது அதன் குழாய் கழன்றமையால் அதனை பூட்ட முயற்சித்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தொடர்ச்சியாக கிணற்று மோட்டர் இயங்கிக் கொண்டிருப்பதை அயல் வீட்டார் ஒருவர் அவதானித்துள்ளார்.
இதையடுத்து, அயல் வீட்டார் கிணற்றடிக்கு சென்று கிணற்று மோட்டாரை அணைத்து விட்டு இது குறித்து வீட்டாருக்கு அறிவித்துள்ளார்.
குறித்த யுவதி நீண்ட நேரமாக காணாமல் போயிருந்த நிலையில், சந்தேகம் ஏற்பட்டதையடுத்து வீட்டாரும் அயல் வீட்டாரும் பிரதேச மக்களும் சேர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர தேடுதலின் பின்னர் யுவதி கிணற்றிற்குள் விழுந்து கிடந்தமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பிரதேச இளைஞர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட யுவதி வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் பொலிசார் மேற்கொண்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் சமனங்குளம் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.