வவுனியா நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவன் மீது பாடசாலை வளாகத்தில் வைத்து இளைஞர்கள் தாக்குதல் நடத்தியதில் மாணவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (07/02/2025) இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவன் ஒருவருக்கும், கீழ் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக குறித்த முரண்பாடு நீடித்து வந்த நிலையில், கீழ் வகுப்பு மாணவன் வெளி இளைஞர்களை அழைத்துச் சென்று உயர்தர மாணவன் மீது பாடசாலை வளாகத்தில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனால் உயர்தர மாணவன் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை எனபதும் குறிப்பிடத்தக்கது.








