விசேட அதிரடிப் படைக்கு புதிய வாகனங்கள் – 100 உந்துருளிகள் மற்றும் 50 முச்சக்கர வண்டிகள் கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!
விசேட அதிரடிப் படையினருக்காக 100 உந்துருளிகள் மற்றும் 50 முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது நாடு முழுவதும் செயல்பட்டு வரும் விசேட அதிரடிப் படையின் கீழ் 76 பிரதான முகாம்கள், 23 உப முகாம்கள் மற்றும் 14 விசேட பிரிவுகள் உள்ளன.
அந்தப்படையினரிடம் தற்போது பயன்பாட்டில் உள்ள 314 உந்துருளிகளில் சுமார் 90% வாகனங்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என்பதால், அவற்றில் அடிக்கடி இயந்திரக் கோளாறுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை, விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சுற்றிவளைப்புகளுக்கு தடையாக அமைந்துள்ளதாக அறியப்படுகிறது.
எனவே, படையினரின் நடவடிக்கைகளை வினைத்திறனாக மேற்கொள்ளும் நோக்கில், 125 CC கொள்ளவுடைய 100 உந்துருளிகள் மற்றும் 50 முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதற்கான யோசனையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.
அந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
![]()