யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வந்த இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் வருகை தந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் (10) ஜந்தாவது நாளாக இடம்பெற்ற நிலையில் குறித்த நிகழ்வுக்கு வருகை தந்த நயினாதீவைச் சேர்ந்த 26 வயதான பெண் இரண்டு கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்காட்சிக்கு பொதியுடன் வந்த பெண்ணை பிரதான நுழைவாயிலில் சோதனையிட்ட போதே கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில் குறித்த பெண் விமானப்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது