பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ள எந்தவொரு நாட்டிலிருந்தும் விலங்குகள் மற்றும் விலங்குப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப் போவதில்லை என இலங்கையின் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
தற்போது பல நாடுகளில் மீண்டும் பரவியுள்ள பறவைக் காய்ச்சல் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேற்படி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்கு விலங்குகள் அல்லது விலங்கினப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க போவதில்லை. அமெரிக்காவில் கால்நடைகளுக்கு இடையில் முதன்முறையாக பறவைக் காய்ச்சல் பதிவாகியமை மிகவும் ஆபத்தான நிலையாகும்.
இந்நிலையில், நாட்டில் நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பறவைக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என தெரிவித்துள்ளார்.