Tamil News Channel

விளிம்புநிலை அரச உத்தியோகத்தர்களின் காணிகள் பறிபோகும் அபாயம்…

sridharans

கிளிநொச்சி மாவட்டத்தில் காலங்காலமாக வசித்துவரும் மக்களுக்கான காணி உறுதிகளை, பாகுபாடற்ற முறையில் வழங்கி வைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முடிக்குரிய காணிகள் கட்டளைச் சட்டம் தொடர்பில் கடந்த 21ஆம் திகதி பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே அவர் மேற்படி கோரிக்கையைப் பதிவுசெய்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போது உறுதிகளை வழங்குவதற்கான பூர்வாங்கச் செயற்பாடுகள் அமைச்சு மற்றும் திணைக்கள மட்டங்களால் முன்னெடுக்கப்படுகின்ற போதும், அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சாதாரண நடைமுறைகளுக்கு உட்பட்டு உறுதிகளை வழங்கமுடியாதெனவும், அவர்கள் தமது சொந்தக் காணிகளை பெருந்தொகைப் பணம் செலுத்தி நீண்டகாலக் குத்தகை அடிப்படையிலேயே பெறமுடியும் எனவும் நிர்ப்பந்திக்கப்படுவது மிகமோசமான பகற்கொள்ளை போன்ற செயலாகவே தென்படுகிறது.

மற்றும் தம்மிடமிருந்த சிறுசிறு சேமிப்புகளை எல்லாம் முதலீடாக்கி, கடன்களைப் பெற்று தமது குடியிருப்புக் காணித் துண்டுகளில் நிரந்தர வீடுகளை அமைத்த சாதாரண விளிம்புநிலை அரச உத்தியோகத்தர்கள், தமது காணிகளுக்கான உறுதிகளைப் பெறுவதற்கு அரசாங்கத்துக்கு பல இலட்சக் கணக்கில் பணம் செலுத்த வேண்டுமென்ற நடைமுறை, அவர்களின் அடிப்படை இருப்பையே நசுக்கக்கூடிய செயற்பாடாகும்.

எனவே, கிளிநொச்சி மாவட்ட மக்கள் காணி உறுதிகளை பெறுவதில் எதிர்கொள்கின்ற இத்தகைய இடர்பாடுகள் சீர்செய்யப்பட்டு உத்தியோகத்தர்கள், சாதாரண பொதுமக்கள் என்ற பாகுபாடுகளற்று அனைத்து மக்களுக்கும் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts