கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் 64 மில்லியன் செலவில் காபெட் வீதியாக கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பனிச்சங்கேணி சல்லித்தீவு வீதியானது புணரமைக்கப்பட்டது.
இவ் வீதியானது மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வானது கட்சியின் பிரதேச குழு தலைவர் மதிவேந்தன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பையேற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் இணைந்து குறித்த வீதியினை மக்கள் பாவனைக்கு வைபவ ரீதியாக திறந்து வைத்திருந்தனர்.
இப்பிரதேசத்தை சுற்றுலாத்துறை சார்ந்து அபிவிருத்தி செய்வதன் ஊடாக பொருளாதார ரீதியில் வலுப்படுத்த முடியும் என்ற இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களின் கருதிட்டத்திற்கு அமைவாக பல்வேறு முனைப்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு அங்கமாக சுற்றுலா துறைசார்ந்தும், மீன்பிடி மற்றும் ஏனைய கைத்தொழில் துறைசார்ந்தும் பங்களிப்பு செய்யக்கூடிய மிக முக்கிய போக்குவரத்து மார்க்கமாக காணப்படும் குறித்த வீதியானது காபெட் வீதியாக செப்பனிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் திரு. ரஞ்சித் ரூபசிங்க, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஜீவானந்தம், கட்சியின் பிரதித்தலைவர் நாகலிங்கம் திரவியம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திரு. சூரிய பண்டார, பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.