மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் (1/16/2025) பட்டப்பகலில் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் மன்னார் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் பொலிஸார் மீதும் சட்டத்தின் மீதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் நடைபெற்ற 2வது துப்பாக்கிச்சூடு சம்பவம் இது என்பதுடன் 4 நபர்கள் குறித்த இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் (1/16/2025)  காலை 8.30 மணிக்கும் 9  மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றுக்கு வருகை தந்த நான்கு பேர் மீது மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இனம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதுடன் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நாள்வரில் இருவர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் பட்டப்பகலில் நீதிமன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை தடுக்க முடியாத பொலிஸார் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் போனமை தொடர்பில் மக்கள் பொலிஸார் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

துப்பாக்கி சூடு இடம் பெற்ற இடத்தில் ஒரு பகுதியில் நீதிமன்ற வளாகமும் அங்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸார் கடமையில் இருந்த நிலையில் மறு பக்கம் மன்னார் மாவட்ட போக்குவரத்து பொலிஸாரின் அலுவலகம் காணப்பட்ட நிலையில் சம்பவம் இடம் பெற்ற இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இராணுவ முகாம் காணப்பட்ட நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளதுடன் சந்தேக நபர்களும் தப்பி சென்றுள்ளமை மன்னார் மாவட்ட பொலிஸார் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பு கடமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாகவே குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் மீது கடந்த வருடம் பொலிஸ் சீருடைக்கு ஒத்த சீருடையுடன் வருகை தந்த நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் குறித்த நபர் தெய்வாதீனமாக உயிர் தப்பி இருந்தார்.

அதே நேரம் சம்பவத்தின் பின்னணியில் உள்ள வழக்கு ஒன்றுடன் தொடர்பு பட்ட நபர் ஒருவர் உள்ளடங்களாக அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரும் முன்னதாகவே அடம்பன் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் ஒரு வருடம் கடந்த நிலையில் குறித்த கொலை தொடர்பிலோ கொலை முயற்சி தொடர்பில் பொலிஸார் எந்த வித கைது நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இவ்வாறான நிலையில் இன்றைய தினம் (1/16/2025) நீதிமன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற குறித்த கொலை சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது டன் பொலிஸார் மீதும் அவர்களின் விசாரணை நடவடிக்கைகள் மீதும் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னைய துப்பாக்கி சூடு சம்பவங்கள் மற்றும் கொலை சம்பவங்கள் போன்று சம்பவத்தின் பின்னர் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அப்பகுதியில் உள்ள CCTV கெமராக்களையும் சோதித்து வருகின்றனர்.

இருப்பினும் இதுவரை குறித்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

[மன்னார் நிருபர்எஸ்.ஆர்.லெம்பேட்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here