அமெரிக்க அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட வரிக்கொள்கை நாட்டில் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனை பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி இலங்கை ஏற்றுமதிகளுக்கு 44 சதவீத தீர்வை வரியினை விதித்துள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் உலக நாடுகளின் ஏற்றுமதிகளுக்கு இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்குமென முன்னதாகவே நாம் அரசாங்கத்திற்கு அறியப்படுத்தினோம்.
அதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கின்றது என்ற உளநல பிரச்சினை காரணமாகவே இது தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை.
தற்போது இந்த பிரச்சினையை ஆராய்வதற்குக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரொருவர் கூறுகின்றார்.
முன்னதாக நாம் கூறிய விடயத்திற்குச் செவிசாய்த்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தால் குறைந்தபட்சம் வரி வீதத்தையேனும் குறைத்திருக்கலாம்.
தற்போது இந்த வரி அறவிடப்படுமானால் நாட்டில் பொருளாதார பேரழிவு ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.








