சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடரின் தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்று இரவு 7.00 மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது.
குறித்த சுற்றுப்பயணத்தில் முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 எனவும், ஒருநாள் சர்வதேச தொடரை 2-1 எனவும் இலங்கை அணி கைப்பற்றிய நிலையில் தற்போது நடைபெறும் T20 சர்வதேச தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணியும்,
இரண்டாவது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியும் வெற்றிபெற்றன. இந்நிலையில் தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் விறுவிப்பான ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இதுவரையில் 5 இருதரப்பு T20 சர்வதேச தொடர்கள் நடைபெற்றுள்ளன.
இதில் இலங்கை அணி 5 தொடர்களையும் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. தரவுகளின் படி பங்களாதேஷ் அணி இதுவரையில் இலங்கை அணியுடன் T20 சர்வதேச தொடரை கைப்பற்றாத நிலையில் தற்போது முதல் முறையாக வரலாறு படைக்கும் முனைப்பில் களமிறங்குகிறது.
இதேவேளை இன்று போட்டி நடைபெறும் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் 4 T20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இறுதி 3 போட்டிகளை பங்களாதேஷ் அணி வெற்றிகொண்டு இம்மாதானத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும் 2018ஆம் ஆண்டின் பின் இரு அணிகளும் இம்மைதானத்தில் T20 ஆட்டத்தில் சந்திக்கின்றன.
இலங்கை மண்ணில் இரு அணிகளுக்குமிடையில் இதுவரையில் நடைபெற்றுள்ள 7 T20 ஆட்டங்களில் பங்களாதேஷ் நான்கிலும், இலங்கை மூன்றிலும் வெற்றிபெற்றுள்ளன.



