திரையரங்குகளில் பட்டையை கிளப்பும் கருடன் திரைப்படம் மூன்று நாட்களில் இந்திய ரூபாவில் 14.45 கோடிகளை வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் பகிர்ந்துள்ளது.
இயக்குனர் துரை செந்தில் இயக்கி உள்ள கருடன் படத்தில், நடிகர் சூரி இரண்டாம் முறையாக ஹீரோவாக நடித்துள்ளார். இவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஸ்வேதா, ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரகனி, மைம் கோபி, ஆர்வி உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

கருடன் கதை : தேனியில் உள்ள கோம்பை அம்மன் கோயில் நிலத்தை அபகரிக்கத் துடிக்கிறார் அமைச்சர் தங்கபாண்டி. அந்த கோவிலின் பட்டா, கோயிலுக்குச் சொந்தமான வங்கி லாக்கரில் உள்ளது. அதை பராமரித்து வருகிறது வடிவுக்கரசியின் குடும்பம். அந்தக் குடும்பத்தை சேர்ந்த சசிகுமார், உன்னி முகுந்தன் இணை பிரியாத நண்பர்களாக உள்ளனர். இதில், சிறுவயது முதல் சோறு போட்டு வளர்த்த உன்னி முகுந்தனுக்காக தனது உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறார் சூரி.
உன்னி முகுந்தனுக்கு பண கஷ்டம் வர ஒரு தவறை செய்துவிடுகிறார். இது குத்து, கொலை வரை சென்று சசிகுமார், உன்னி முகுந்தன் இவர்களின் நட்பில் விரிசலாக மாறிவிடுகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, கோவில் நிலத்தை அடைய திட்டம் போடுகிறார் அமைச்சர். அமைச்சருக்கு கோவிலின் பட்டா கிடைத்ததா? நண்பர்கள் சேர்ந்தார்களா? சூரி யார் பக்கம் நின்றார் என்பதுதான்? கருடன் திரைப்படத்தின் மீதிக்கதை.

விடுதலை திரைப்படத்தில் குமரேசன் கேரக்டரில் சூரி எப்படி உணர்ச்சி பொங்க நடித்து இருந்தாரோ அதே போல, இந்த படத்திலும் சொக்கன் கதாபாத்திரத்தில் தன்னை மெருகேற்றிக்கொண்டு நடித்துள்ளார். முதல் பாதியில் வழக்கமான கதையாக செல்லும் இப்படம் இடைவேளைக்குப் பிறகு விறுவிறுப்பாக செல்கிறது. சூரியின் மாஸ் ஆக்சன் தியேட்டரையே அலறவிடுகிறது. சசிக்குமார், உன்னி முகந்த், சூரி என படத்தில் மூன்று ஹீரோக்கள் இருந்தாலும், மொத்த கதையையும் தன் தோளில் சுமந்து பயணம் செய்துள்ளார் சூரி.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இத்திரைப்படம் முதல் நாளில், ரூ. 3.5 கோடிகளை வசூலித்த நிலையில், இரண்டாம் நாளான சனிக்கிழமை ரூ.4.35 கோடியும், ஞாயிற்றுக் கிழமையான நேற்று ரூ.6.10 கோடியை வசூலித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.








