எப்போதும் சர்ச்சையில் சிக்கும் சாமியார்களில் ஒருவரான நித்தியானந்தாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
தற்போது இந்தியாவில் இருந்து வெளியேறி கைலாசாவில் வசித்து வரும் இவர் அவ்வப்போது சமூக ஊடகங்களில் மக்களை சந்தித்து வருகின்றார் என குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
குறித்த தகவலை நித்தியானந்தாவின் சகோதரியின் மகன் சுந்தரேஸ்வரன் காணொனி மூலம் தெரிவித்துள்ளார்.

யார் இந்த நித்யானந்தா?
தமிழ்நாட்டில் அனைவராலும் அறியப்பட்ட பிரபல சாமியாராக நித்யானந்தா இருக்கிறார். ஆன்மீக மற்றும் ஊழல் விவகாரங்களில் சிக்கி மக்களின் கவனத்தை ஈர்த்த இவர், முதன்முதலாக பிரபல நடிகையுடன் தனிமையில் இருந்த ஒரு காணொளி இணையத்தில் வெளியானதன் மூலம் சர்ச்சையில் சிக்கினார்.
அதனை தொடர்ந்து பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி சிறைக்கு சென்றார். நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் இருந்தாலும், நடிகை ரஞ்சிதாவுடனான அவரது சர்ச்சைக்குரிய ஈடுபாடு பெரும் அவப்பெயரை அவருக்கு கொடுத்தது.
இவர் மீது பாலியல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்குகள் இருந்ததால், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.
பின்னர் சிறிது காலம் கழித்து இந்து மக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை நிறுவுவதாக அறிவித்தார். அந்த நாட்டிற்கு தன்னைத்தானே ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்டு, அங்கிருந்து ஆன்மீக சொற்பொழிவுகளை ஆற்றி வந்தார்.

நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கோமாவில் இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் பரவியது.
ஆனால் சிறிது நேரத்திலேயே இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வீடியோ மூலம் சொற்பொழிவுகளை வழங்க தொடங்கினார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நித்யானந்தாவின் சகோதரியின் மகன், இந்து தர்மத்தைக் காக்க நித்யானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டதாக காணொளி ஒன்றில் குறிப்பிட்டுள்ளமை மீண்டும் இணையத்தில் புதிய புயளை கிளப்பியுள்ளது.
இருப்பினும் பல்வேறு வழக்குகளில் இருந்து தப்பிக்க நித்தியானந்தா இவ்வாறு பொய்யான தகவலை பரப்பலாம் என்றும் ஒரு சாரார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் அவர் உயிருடன் இருப்பதாக கைலாசாவின் அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நித்தியானந்தா இன்று நேரலையில் தோன்றுவார் என்றும் கைலாசா சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





